கோலாலம்பூர், அக். 31- இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை
ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தக்கூடிய தினமாக
விளங்க வேண்டும் என்று அமைச்சர்கள் தங்களின் தீபத் திருநாள்
வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளனர்.
தீபாவளி என்பது இந்துக்கள் மட்டும் கொண்டாடக்கூடிய பண்டிகையாக
மட்டும் அல்லாமல் இந்நாட்டில் வாழும் பல்லின மக்களும் இணைந்து
கொண்டாடும் விழாவாக அமைகிறது என்று தேசிய ஒற்றுமைத் துறை
அமைச்சர் டத்தோ ஆரோன் ஆகோ டாகாங் கூறினார்.
பாரம்பரிய நிறைந்த மற்றும் வேறுபட்ட மரபுகளைக் கொண்ட இந்நாட்டில்
பல்லின மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு உரிய மதிப்பளிப்பது
அனைவரின் கடமையாகும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளி
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட போக்குவரத்து அமைச்சர்
அந்தோணி லோக், நாட்டின் வழித்தோன்றல்கள் என்ற முறையில் நாம்
அனுபவித்து வரும் ஒற்றுமையை தொடர்ந்து கட்டிக்காப்பது அனைவரது
பொறுப்பாகும் என சொன்னார்.
உள்ளடக்கிய உணர்வுகளை விதைப்பதன் வாயிலாகவும் ஒருவரை ஒருவர்
மதிப்பதன் மூலமாகவும் மலேசியாவின் ஒற்றுமை தொடர்ந்து வலுவுடன்
இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் அனைத்து
மக்களும் பயன் பெறும் வகையில் மேம்பாட்டைக் காண முடியும்
என்றார் அவர்.
ஒற்றுமையை வளர்ப்பதற்கும் ஒருவரை ஒருவர் மதிக்கும் குணத்தை
வலுப்படுத்துவதற்கும் நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்காக உறுதி
மொழியை புதுப்பிப்பதற்கும் இந்த தீபாவளி அடித்தளம் இடும் என
நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
சுற்றுலா, கலை மற்றும் கலாசார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் இந்நாட்டிலுள்ள அனைத்து
இந்துக்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அனைத்து இந்துக்களுக்கும் தனது தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொண்ட இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா
இயோ, சாலைகளில் மிகவும் கவனப் போக்கை கடைபிடிக்கும்படி கேட்டுக்
கொண்டார்.








