கோலாலம்பூர், அக். 30- மலேசிய இரட்டையர் பூப்பந்து வீராங்கனையான
எம்.தீனா, ஏழாண்டுகளுக்குப் பிறகு தன் குடும்பத்தினருடன் தீபாவளியைக்
கொண்டாடுவதற்குரிய அரிய வாய்ப்பினை இம்முறைப் பெற்றுள்ளார்.
தற்போது கிள்ளானில் வசித்து வரும் 26 வயதான தீனா,
குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடுவதற்கு கிடைத்த இந்த
சந்தர்ப்பத்தை ஒரு பொன்னான வாய்ப்பாக கருதுகிறார்.
இதற்கு முன்னர் தீபாவளி பெருநாளின் போதெல்லாம் அனைத்துலக
விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதற்காக நான் குடும்பத்தினரைப்
பிரிந்து வெளிநாடுகளில் இருந்தேன்.
ஆனால், இம்முறை தீபாவளி கொண்டாட்டம் பொருத்தமான தேதியில்
வருவதால் இது எனக்கு தனித்துவமிக்க திருநாளாக விளங்குகிறது.
முன்பெல்லாம் நான் தீபாவளியை பண்டிகை தினத்திற்கு முன்பு அல்லது
பின்பு கொண்டாடுவேன் என அவர் குறிப்பிட்டார்.
இம்முறை நான் கோலாலம்பூரில் தங்கியுள்ளதால் தீபாவளியைக்
கொண்டாட வீட்டிற்கு செல்ல முடியும். இது எனக்கு மகிழ்சியைத்
தருகிறது என்று அவர் சொன்னார்.
மலேசிய பூப்பந்து சங்கம் அண்மையில் வெளியிட்ட எம்.தீனாவின் குரல்
பதிவில் இந்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. முந்தைய தீபாவளி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அந்த இளம் விளையாட்டு வீராங்கனை, 2022ஆம் ஆண்டு தமக்கு மறக்க இயலாது ஆண்டு என்றும் தீபாவளியின் போது பிரான்ஸ் பொது பூப்பந்துப்
போட்டியில் பங்கேற் வேண்டியதாக இருந்தது என்றும் கூறினார்.
அந்த ஐரோப்பிய நாட்டில் தீபாவளி புத்தாடை உடுத்தி நண்பர்களுக்கு
சிறிய அளவில் விருந்து நடத்தி பெருநாளைக் கொண்டாடினேன். அப்போது
நான் தீபாவளி பண்டிகையைத் தியாகம் செய்தது உரிய பலனைத் தந்தது.
2022ஆம் ஆண்டிற்கான பிரான்ஸ் பொது பூப்பந்து வெற்றியாளராக நாங்கள்
வாகை சூடினோம். இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் மலேசிய
மகளிர் இரட்டையர் என்ற பெருமையையும் நாங்கள் பெற்றோம் என்றார்
அவர்.








