கோலாலம்பூர், அக். 30- உக்ரேன் நாட்டின் ஸப்போரிசியா, லெவாட்னியில்
மலேசியருக்குச் சொந்தமானது என நம்பப்படும் மைகாட் மற்றும்
வானமோட்டும் லைசென்ஸ் கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படும்
தகவலின் நம்பகத்தன்மையை அரச மலேசிய போலீஸ் படை ஆராய்ந்து
வருகிறது.
உள்துறை அமைச்சிடமிருந்து விரிவான விபரங்களைப் பெறுவதன் மூலம்
இந்த தகவலின் நம்பகத் தன்மையை தாங்கள் ஆராய்ந்து வருவதாக
தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் கூறினார்.
உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நிகழ்ந்து வரும் இடத்தில்
மலேசியருக்குச் சொந்தமான மைகாட் மற்றும் வாகனமோட்டும்
லைசென்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதைச் சித்தரிக்கும் படங்கள் சமூக
ஊடங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.
உக்ரேன் நாட்டின் ஸப்போரிசியா, லெவாட்னியிலுள்ள அந்நாட்டின்
வலுவான கோட்டையை ரஷ்யா கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த
ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக அந்த தகவல் கூறியது.
இதனிடையே, இந்த தகவலின் உண்மைத் தன்மையை தங்களால்
இதுவரை உறுதி செய்ய இயலவில்லை என்றும் வெளிநாடுகளில்
இருக்கும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி
மலேசியர்களைத் தாங்கள் கேட்டுக் கொள்வதாகவும் வெளியுறவு அமைச்சு
அறிக்கை ஒன்றில் கூறியது.








