கோலதிரங்கானு, அக். 30- நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள வெள்ள அபாயம் உள்ள 5,648 இடங்களை ஓப் ராமா எனும் இயக்கத்தின் வாயிலாக மலேசிய பொது தற்காப்பு படை (ஏபிஎம்) கண்காணிக்கவுள்ளது.
திடீரென வெள்ளப் பேரிடர் ஏற்படும் பட்சத்தில் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தன்னார்வர்வலர்கள் உள்பட 15,000 அதிகாரிகளும் உறுப்பினர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஏபிஎம் தலைமை ஆணையர் அமினுரஹிம் முகமது கூறினார்.
மோட்டார் சைக்கிளில் ரோந்து நடவடிக்கையை மேற்கொள்ளும் ஓப் ராமா உறுப்பினர்கள் கடற்கரைகள், நீர்வீழச்சிகள் மற்றும் பொழுது போக்கு மையங்களுக்கு சென்று பேரிடர் ஏற்படுவதற்கான அபாயம் குறித்த முன்னெச்சரிக்கையை வழங்குவர் என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படாவிட்டாலும் ஏபிஎம் வெறுமனே இருந்து விடாது. மாறாக, எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கும் என்று அவர் சொன்னார்.
இம்முறை மேற்கொள்ளப்படும் ஓப் ராமா நடவடிக்கை பேரிடர் அபாயம் உள்ள இடங்களை மையமிட்டிருக்கும். தொழில்நுட்பத் துறைகள், வடிகால் நீர்பாசனத் துறை மற்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தகவல்களை நாங்கள் வழிகாட்டியாக க் கொள்வோம் என அவர் தெரிவித்தார்.








