ஈப்போ, அக். 27- தெலுக் இந்தான் சாய்வுக் கோபுர சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற அரசு சாரா நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.) கூட்டம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக பேராக் காவல்துறை தலைவர் டத்தோ அஸிசி மாட் அரிஸ் தெரிவித்தார்.
பேரணி ஏற்பாடு குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினர் காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை என்று அவர் சொன்னார்.
இதன் தொடர்பில் 2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்டத்தின் 9(1)வது பிரிவின் கீழ் போலீசார் விசாரித்து வருவதாகவும் மேலும் விசாரணை நடத்துவதற்காக விசாரணைக்கான உத்தரவு (ஒ.டி.ஐ.) கோரப்படும் என்றும் அவர் கூறினார்.
விசாரணை அறிக்கையை முழுமைப்படுத்துவதற்கு ஏதுவாக வாக்குமூலம் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்படுவார்கள் என்றார் அவர்.
ஜாலூர் ஜெமிலாங் கொடியை பறக்கவிடும் இயக்கத்தையொட்டி தெலுக் இந்தான் சாய்வு கோபுர சதுக்கத்தில் இன்று சுமார் 400 பேர் கூடியதாகவும் அதில் பேராக் மாநில பாஸ் கட்சி ஆணையரும் (ரஸ்மான் ஜகாரியா) கலந்து கொண்டார் என்றும் அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.








