சிபு, அக் 27- இரு ஆடவர்கள் பெண்மணி ஒருவரின் காரின் கண்ணாடியை உடைத்து நிறுவனத்திற்குச் சொந்தமான 301,231 வெள்ளியைத் திருடிச் சென்றனர். இச்சம்பவம், இங்குள்ள ஜாலான் கம்போங் நியாபோர் கார்நிறுத்துமிடப் பகுதியில் நேற்று காலை நிகழ்ந்தது.
நேற்று காலை 11.10 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் தாங்களுக்கு புகார் கிடைத்ததுள்ளதாக சிபு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜூல்கிப்ளி சுஹைலி கூறினார்.
சம்பவம் நிகழ்வதற்கு முன்பு நிறுவனத்தின் ஊழியரான 27 வயது பெண் ஒருவர் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துள்ளது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அப்பெண் பணத்தை காரில் வைத்துக் கொண்டு பயணத்தை தொடர்ந்த போது சந்தேக நபர்கள் அவரைப் பின் தொடர்ந்துள்ளனர். வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தியபோது, சந்தேக நபர்களில் ஒருவன் காரை நெருங்கி ஓட்டுநரின் பக்கவாட்டு கார் கண்ணாடியை உடைத்து பயணிகள் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த பணப்பையை எடுத்தான் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவ்வாடவன சாலையோரத்தில் காத்திருந்த தனது சகாவின் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் வாகனத்தில் உள்ள டாஷ்போர்டு கேமரா காட்சிகளின் அடிப்படையில் இரு சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறிய அவர், வங்கிகளில் பெரிய தொகையைக் கையாளும் போது மிகவும் கவனமாக இருக்கும் அதே வேளையில் கொள்ளையர்கள் எளிதில் அடையாளம் காணக்கூடிய இடங்களில் மதிப்புமிக்க பொருட்களை வைக்க வேண்டாம் என்று அவர் பொது மக்களுக்கு நினைவூட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 379 மற்றும் 427வது பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.








