(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 26- கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில்
நேற்று நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்வில் பல்லினங்களைச்
சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன்
தலைமையில் ஷா ஆலம், செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் நடைபெற்ற
இந்த நிகழ்வில் ஒற்றுமை அரசின் உறுப்புக் கட்சிகளான அம்னோ மற்றும்
மஇகா வட்டாரத் தலைவர்களோடு போலீஸ், ஷா ஆலம் மாநகர்
மன்றத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சியுடன் கூடிய இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் கலந்து
கொண்டவர்களுக்கு அருசுவை உணவு பரிமாறப்பட்டது. வசதி குறைந்த
இருபது சிறார்களுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கப்பட்டதோடு
அதிர்ஷ்டக் குலுக்கில் கவர்ச்சிகரமான பொருட்களை பெறுவதற்குரிய
வாய்ப்பும் வழங்கப்பட்டது.
இந்த பொது உபசரிப்பு நிகழ்வில் உரையாற்றிய பிரகாஷ், அனைவருக்குத்
தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு இவ்வாண்டு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த தரப்பினருக்கு
பல்வேறு உதவிகள் வழங்குவதற்கான முயற்சிகளை தொகுதி சேவை
மையம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார்.
மாநில அரசின் ஜோம் ஷோப்பிங் திட்டத்தின் வாயிலாக தொகுதியிலுள்ள
450 குடும்பங்களுக்கு தலா 200 வெள்ளி பற்றுச் சீட்டுகளை நாங்கள்
வழங்கினோம். இது தவிர தொகுதியின் சார்பாக 100 பேருக்கு உணவுக்
கூடைகளும் வழங்கப்பட்டன. மேலும், டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங்
டியோ மூலம் 200 பேருக்கு பற்றுச் சீட்டுகள் வழங்குவதற்கான
ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சிகரமாக கொண்டாடும் அதே வேளையில்
பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் தரும் பொறுப்பிலிருந்து
ஒருபோதும் தவறிவிட வேண்டாம் என பெற்றோர்களை அவர் கேட்டுக்
கொண்டார்.
இந்நாட்டில் நமது சமூகம் வறுமையிலிருந்து மீள்வதற்கு உள்ள ஒரே வழி
கல்வி மட்டும்தான். நாட்டிலுள்ள யாரும் பி40 தரப்பினர் என முத்திரைக்
குத்தப்படுவதைக் காண நான் விரும்பவில்லை. நாம் பி40 தரப்பினர்
என்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளவும் கூடாது.
அடுத்தாண்டு நான் வறுமையிலிருந்து மீள்வேன் என நாம் உறுதி கொள்ள
வேண்டும். அதற்கு நம்மிடையே சிந்தனை மாற்றம் ஏற்பட வேண்டும்.
நாம் முயற்சி எடுக்காவிட்டால் நமது தலைவிதியை யாராலும் மாற்ற
இயலாது. மாற்றம் என்பது நமக்குள் ஏற்பட வேண்டும். நமது குடும்பத்தில்
ஏற்பட வேண்டும், அப்போதுதான் சமூகத்தில் மாற்றம் ஏற்படும் என அவர்
குறிப்பிட்டார்.
இந்த தொகுதி எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சனையான வெள்ளப்
பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு
மத்திய அரசின் உதவியுடன் எடுத்து வருவதாக அவர் சொன்னார்.








