(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 25- இம்மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு தலைமைச் செயலகம் பல வண்ணங்களைக் கொண்ட எழில்மிகு கோலத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தின் பிரதான வரவேற்புக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோலத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்துக்களின் சமய மற்றும் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் கோலத்தை அழகிய வடிவத்தில் அமைக்கும் பணியை பாப்பாராய்டு அலுவலக பணியாளர்கள் மிகவும் சிறப்பான முறையில் மேற்கொண்டனர்.
மக்கள் மத்தியில் பண்டிகை கால மகிழ்ச்சியை ஏற்படுத்துவதில் துணை புரியும் இந்த கோலத்தை திறந்து வைக்க பெருமனதுடன் ஒப்புதல் வழங்கிய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பாப்பாராய்டு தெரிவித்தார்.
கோலம் என்பது வீட்டு வாயில்களில் அல்லது வாசலில் அரிசி மாவு அல்லது வேறு வண்ணப்பொடிகளைப் பயன்படுத்தி பெண்களால் வரையப்படும் வடிவங்கள் ஆகும். இந்த கலை பழங்கால தமிழ்நாட்டிற்கு சொந்தமானது. கோலத்தின் பிராந்திய மாறுப்பாடுகள் இவற்றின் தனித்துவமான வடிவங்களுடன் இந்தியாவில் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன. எறும்பு போன்ற உயிரினங்களுக்கு உணவளிக்கும் உன்னத நோக்கத்தையும் கோலங்கள் கொண்டிருக்கின்றன.








