ஷா ஆலம், அக். 18- வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் கால்வாய்களைச் சுத்தம் செய்வதற்கும் ஆறுகளை ஆழப்படுத்துவதற்கும் ஊராட்சி மன்றங்கள் மற்றும் வடிகால் மற்றும் நீர் பாசனத் துறைக்கு (ஜே.பி.எஸ்.) 15 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், பேரிடர் மேலாண்மை நிறுவனமும் தரம் உயர்த்தப்படவுள்ளதோடு அனைத்து குத்தகையாளர்களின் உதவியுடன் வெள்ளத் தடுப்புத் திட்டங்களும் விரைவுபடுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கு காரணமாக விளங்கும் கால்வாய்களில் காணப்படும் குப்பைகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஊராட்சி மன்றங்களும் நகர மக்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
அரசினால் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டங்கள் வருமாறு-
- வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு ஏதுவாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்திற்கு 60 கோடி வெள்ளி மானியம்
- திடீர் பேரிடர்களை எதிர்கொள்வதற்காக 30 கோடி வெள்ளி ஒதுக்கீடு
- பதிலளிப்பு மற்றும் உதவிப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக ஜி.எல்.சி.ஐ மற்றும் ஜி.எல்.சி.க்கு இரண்டு கோடி வெள்ளி இணை மானியம்.
- கால்வாய்கள் மற்றும் நீரோடைகளை துப்புரவு செய்வதற்கும் தரம் உயர்த்துவதற்கும் வெ. 5 கோடி மானியம்.








