(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 19- தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பத்து தீகா
தொகுதியிலுள்ள வசதி குறைந்தவர்களுக்கு ஷோம் ஷோப்பிங் பற்றுச்
சீட்டுகளை வழங்கும் நிகழ்வு இன்று இங்குள்ள செக்சன் 32, கெமுனிங்
உத்தாமா ஜெயண்ட் பேரங்காடியில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பத்து தீகா சட்டமன்ற உறுப்பினர் டேனியல் அல் ரஷிட்
ஹருண் அமினுர் ரஷிட் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட
விண்ணப்பதாரர்களுக்கு இலவச பற்றுச் சீட்டுகளை வழங்கினார்.
பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அதனைப் பயன்படுத்தி
ஜெயண்ட் பேராங்காடியில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப்
பொருள்களை வாங்கிக் கொண்டனர்.

இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு பத்து தீகா தொகுதிக்கு தலா 200
வெள்ளி மதிப்புள்ள 400 தீபாவளி ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்
வழங்கப்பட்டதாக டோனியல் அல் ரஷிட் கூறினார்.
இத்தொகுதியில் 13,000 பதிவு பெற்ற இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்களில் சுமார் 600 பேர் இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம்
செய்திருந்தனர். 400 ஷோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளை வழங்கும்
அதேவேளையில் எஞ்சிய 200 பேருக்கு தொகுதி சேவை மையம்
வசமிருக்கும் உணவுக் கூடைகளை பகிர்ந்தளிக்கவிருக்கிறோம். இதுதவிர,
எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் வழங்கிய 100
உணவுக் கூடைகளும் இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு வழங்கப்படும்
என்றார் அவர்.
தீபாவளி பண்டிகை இம்மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள
நிலையில் பெருநாளுக்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்வதற்கு
ஏதுவாக இந்த பற்றுச் சீட்டுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு இரு
வாரங்களுக்கு முன்பாகவே வழங்ப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த பற்றுச் சீட்டுகளுக்கு கிடைக்கப்பெற்ற
விண்ணப்பங்கள முறையாக பரிசீலனை செய்து தகுதி உள்ளவர்களுக்கு
வழங்குவதில் முழு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து தரப்பினருக்கும்
தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக பத்து தீகா தொகுதி இந்திய சமூகத்
தலைவர் பி.சதாசிவம் கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு மாநிலத்திலுள்ள அனைத்து 56 தொகுதிகளுக்கும்
தலா 200 வெள்ளி மதிப்பிலான 22,000 பற்றுச் சீட்டுகளை மாநில அரசு
வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்காக மொத்தம் 44 லட்சம் வெள்ளியை
மாநில அரசு செலவிட்டுள்ளது.








