ஷா ஆலம், அக். 19- விளையாட்டு நடவடிக்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் சுகாதாரப் பராமரிப்புக்கு தனியார் வருமான வரியிலிருந்து விலக்களிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ரொக்க உதவி, மூத்த குடிமக்கள் அமைப்புக்கான நிதியுதவி மற்றும் மைய நடவடிக்கைகள் உள்பட மூத்த குடிமக்களின் நலன் காக்கும் திட்டங்களுக்கு வழங்கப்படும் உதவி நிதி 100 கோடி வெள்ளியாக அதிகரிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
தடுப்பூசி உள்பட பெற்றோர்களின் மருத்துவத்திற்கு உண்டாகும் செலவுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளுக்கான செலவினங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்கு இனி பெற்றோர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
பெற்றோர்களின் மருத்துவச் செலவினங்களுக்கு தற்போது வழங்கப்படும் வரி விலக்கு தாத்தா, பாட்டிக்கும் விரிபடுத்தப்படுகிறது.
பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு உண்டாகும் செலவு தொகைக்கு வழங்கப்படும் வரி விலக்கு பெற்றோர், தாத்தா மற்றும் பாட்டியைப் பராமரிப்பதற்கான செலவுகளுக்கும் விரிவாக்கம் காண்கிறது.
அதே சமயம், மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் பொறுப்பில் உள்ளவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் சில பரிந்துரைகளையும் அரசாங்கம் முன்வைத்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 7,000 வெள்ளி வரி விலக்கை இனி பெற முடியும்.
மாற்றுத்திறனாளி தம்பதியருக்கான கூடுதல் வரி விலக்கு 6,000 வெள்ளியாக அதிகரிக்கப்படும்








