கோலாலம்பூர், அக். 18- வரும் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தை தாக்கல் செய்த பிரதமர் முந்தைய ஆண்டுகள் போல்
இவ்வாண்டும் திருவள்ளுவர் உள்பட உலக அறிஞர்களின் கருத்துகளையும் மேற்கோள் காட்டினார்.
தனது பட்ஜெட் உரையில் கிரேக்க, சீன அறிஞர்களோடு திருவள்ளுவரின்
“உறுபசியும் ஒவ்வாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு“
எனும் திருக்குறளையும் பிரதமர் குறிப்பிட்டார். (பசியும் பிணியும்
பகையற்ற நாடுதான் சிறந்த நாடு என பாராட்டப்படும் என்பது இக்குறளின்
பொருளாகும்).
முன்னதாக அவர், பிற அறிஞர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டிய
பின்னர் திருக்குறளை மேற்கோள் காட்ட முயன்ற போது அக்குறள்
வாசிக்கும் திரையிலிருந்து காணாமல் போனது போனது கண்டு அவர்
திகைத்துப் போனார்.
தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் இதுதான். ஆனால் அது
திரையிலிருந்து காணாமல் போய்விட்டது. நான் தேடிக்
கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு மணி நேரமாக அதனை நான்
மனப்பாடம் செய்தேன். வேறு மொழியில் வாசிக்க அனுமதி கோருகிறேன்
என அவர் கூறிய போது அவையில் சிரிப்பொலி எழுந்தது.
எனினும், திரையில் மறைந்த திருக்குறளை மீண்டும் கண்டு பிடித்து
பிரதமர் வாசித்த போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டி
தங்களின் மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.








