கோலாலம்பூர் அக் 13- இந்நாட்டில் இந்தியர்களுக்குச் சொந்தமான கூட்டுறவுக் கழகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர்.ரமணன் வலியுறுத்தினார்.
நாட்டிலுள்ள 16,000 கூட்டுறவுக் கழகங்களில் 419 கூட்டுறவுக் கழகங்கள் மட்டுமே இந்தியர்களால் வழி நடத்தப்படுவதாக அவர் சொன்னார்.
நாட்டில் மொத்தம் 72 லட்சம் உறுப்பினர்களுடன் 16,000 கூட்டுறவு கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் இந்தியர்கள் வசமுள்ள 419 கூட்டுறவு கழகங்களில் 2 லட்சத்து 50,000 பேர் மட்டுமே உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்றார் அவர்.
இந்த எண்ணிக்கை போதாது. தேசிய நிலநிதி கூட்டுறவு கழகம் போல் நமது இதர கூட்டுறவு கழகங்கள் முன்னேற்ற வேண்டும். கூட்டுறவு கழகங்கள் வழி இந்திய சமுதாயம் மேலும் பயன் அடைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
என்னோடு இணைந்து கைகோருங்கள். உங்களுக்கு நான் உதவ தயாராக இருக்கிறேன்.
இந்தியர்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறேன். நாட்டில் புதிய இந்தியர் கூட்டுறவு கழகங்கள் அமைக்கவும் நான் உதவ முன் வருகிறேன் என அவர் குறிப்பிட்டார்
இன்று கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பேங்க் ரக்யாட் மண்டபத்தில் மலேசிய இந்தியர் கூட்டுறவு கழகத்தின் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்திய கூட்டுறவு கழகங்கள் துடிப்புடன் செயல்படுவதை உறுதி செய்வதற்காக இந்திய கூட்டுறவு கழக மாநாடு மிகப்பெரிய அளவில் தமது அமைச்சின் கீழ் நடத்துவதாக அவர் சொன்னார்
இதனிடையே, இன்று நடைபெற்ற மலேசிய இந்திய கூட்டுறவுக் கழகங்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து கூட்டுறவுக் கழங்களும் தலா 30,000 வெள்ளி வழங்கப்படும் என்றும் ரமணன் அறிவித்தார்.
இந்த 30,000 வெள்ளி மானியத்திற்கு கூட்டுறவுக் கழகங்கள் விண்ணப்பம் செய்யலாம் அவர் தெரிவித்தார்.
100 ஆண்டுக்கால கூட்டுறவுக் கழக வரலாற்றில் இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாடு நடத்தப்படுவது இதவே முதன் முறை என்றும் அவர் சொன்னார்.








