(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக் 13- சிலாங்கூர் மாநில அரசின் பெருநாள் கால ஜோம்
ஷோப்பிங் திட்டத்தின் கீழ் பந்திங் தொகுதியிலுள்ள 400 குடும்பங்களுக்கு
தலா 200 வெள்ளி மதிப்புள்ள இலவச பற்றுச்சீட்டுகள் நேற்று
வழங்கப்பட்டன.

பந்திங்கில் உள்ள எக்கோன் சேவ் அண்ட் கேரி பேரங்காடியில்
நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்
மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினருமான வீ.பாப்பாராய்டு தலைமை தாங்கினார்.
இத்திட்டப் பயனாளிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட பற்றுச் சீட்டுகளைப்
பயன்படுத்தி தீபாவளி பெருநாளுக்குத் தேவையான அத்தியாவசியப்
பொருள்களை இப்பேரங்காடியில் வாங்கி கொண்டனர்.
பெருநாளைக் கொண்டாடுவதில் குறைந்த வருமானம் பெறும்
குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்நோக்கும் பொருளாதாரச் சுமையைக்
குறைக்கும் நோக்கில் மாநில அரசு இந்த பெருநாள் கால இலவச
பற்றுச்சீட்டுத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் தீபாவளி பெருநாளுக்காக பந்திங் தொகுதிக்கு 400பற்றுச்சீட்டுகள் வழஙகப்பட்டன. அந்த பற்றுச் சீட்டுகள் நிர்ணயிக்கப்பட்ட
நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. பற்றுச்
சீட்டுகளைப் பெற்றவர்கள் மாநில அரசுக்கும் தொகுதி உறுப்பினர்
பாப்பாராய்டுவுக்கும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநிலத்திலுள்ள 56
தொகுதிகளுக்கு 200 வெள்ளி மதிப்பிலான 22,000 பற்றுச் சீட்டுகளை வழங்க
மாநில அரசு 44 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.








