(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 13- ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த ஓரிட மாட்டுப் பண்ணைத் திட்டப் பிரச்சினைக்கு கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமியின் கடும் முயற்சியால் தீர்வு ஏற்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஏழு மாட்டுப் பண்ணை உரிமையாளர்களுக்கு கோல லங்காட் ஓலாக் லெம்பிட்டில் தலா ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் வழி அவர்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக வளர்ப்பதற்குரிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கோல லங்காட், உலு லங்காட் மற்றும் கிள்ளான் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு மாட்டுப் பண்ணை உரிமையாளர்களுக்கு நேற்று முன்தினம் இந்த நிலத்திற்கான அங்கீகாரக் கடிதம் வழங்கப்பட்டதாக ஹரிதாஸ் தெரிவித்தார்.
முதல் கட்டமாக மூவருக்கு இங்கு தலா ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட் வேளையில் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் எழுவருக்கு நிலம் வழங்கப்பட்டது. இந்த பத்து பேரில் எழுவர் இந்தியர்கள் என்பது குறிப்பிடதக்கது என அவர் குறிப்பிட்டார்.
இந்த ஓரிட மாட்டுப் பண்ணைத் திட்டத்திற்கு மொத்தம் 160 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்ட வேளையில் அதில் 50 ஏக்கரில் கடந்த 2020ஆம் ஆண்டு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு விட்டன. எனினும், நிர்வாக நடைமுறைகளைக் காரணம் காட்டி அந்நிலங்களை வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் செய்து வந்தனர்.
மாட்டுப பண்ணையாளர்களின் கோரிக்கையின் பேரில் இவ்விவகாரத்தை சம்பந்தப்பட்டக் கூட்டங்களில் தாம் அடிக்கடி எழுப்பி வந்ததோடு மந்திரி புசாரின் கவனத்திற்கும் கொண்டுச் சென்றதாக ஹரிதாஸ் சொன்னார்.
சம்பந்தப்பட் மாட்டு பண்ணை உரிமையாளர்களுக்கு நிலம் கிடைக்க உதவிய மாநில அரசு, மாவட்ட நில அலுவலகம் மற்றும் சிலாங்கூர் மாநில கால்நடை இலாகா ஆகிய தரப்பினருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
மேலும் அதிகமான பண்ணை உரிமையாளர்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக எஞ்சிய 110 ஏக்கர் நிலத்தையும் மேம்படுத்துவற்கான முயற்சிகளை தாம் முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கால்நடைகள் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் நுழைவதால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு மாநில அரசு இந்த ஓரிட மாட்டுப் பண்ணைத் திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் மாட்டுப் பண்ணை உரிமையாளர்களுக்கு தலா ஐந்து ஏக்கர் நிலம் 21 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுகிறது.








