கோத்தா கினபாலு, அக். 13- மடாணி ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டத்திற்கு வரும் 2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு எதிர்பார்க்கிறது.
நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்றத் தொகுதிகளில் கூடுதலாக மலிவு விற்பனைகளைத் நடத்தும் முயற்சியை வெற்றியடையச் செய்ய இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டை தாங்கள் எதிர்பார்ப்பதாக அதன் அமைச்சர் அர்மிஸாம் முகமது அலி கூறினார்.
இந்த கூடுதல் நிதி ஒதுக்கீட்டின் வாயிலாக நடமாடும் மடாணி ரஹ்மா திட்டத்தை நகரங்கள் மற்றும் புறநகர்களில் மட்டுமல்லாது சபா உள்பட வெகு தொலைவில் உள்ள கிராமங்களுக்கும் விரிவுபடுத்த இயலும் என்று அவர் தெரிவித்தார்.
கிராமப் புறங்களிலும் இத்தகைய மலிவு விற்பனைகளை நடத்துவதற்கு லோரிகளை ஏற்பாடு செய்யும்படி எங்கள் முகவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளேம். மடாணி ரஹ்மா விற்பனையில் பொருள்கள் மலிவாக விற்கப்பட்டாலும் அதனை வாங்குவதற்கு வரும் கிராமப்புற மக்கள் போக்குவரத்துக்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது என அவர் சொன்னார்.
நேற்று இங்கு சபாவை நேசிப்போம் 2024 மடாணி ரஹ்மா விற்பனைத் திட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சந்தையை விட குறைவான விலையில் பொருட்களை வாங்குவதற்குரிய வாய்ப்பை பொது மக்களுக்கு வழங்கும் இந்த மடாணி ரஹ்மா திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் கிடைத்து வரும் ஆதரவைக் கருத்தில் கொண்டு இதனை விரிவுபடுத்துவதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை நிதியமைச்சிடம் கோரியுள்ளோம் என்றார் அவர்.
அமைச்சின் இந்த எதிர்பார்ப்பை நிதியமைச்சின் கவனத்திற்கு நாங்கள் கொண்டுச் சென்றுள்ளோம். இந்த எதிர்பார்ப்பு நிதியமைச்சருமான பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்திற்கு சென்றிருக்கும் என எதிர்பார்க்கிறோம் என அவர் சொன்னார்.








