சுங்கை பூலோ, அக். 5- சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் முயற்சியாக சுங்கை டாமன்சாராவில் 48 கோடியே 10 லட்சம் வெள்ளி செலவில் வெள்ளத் தடுப்புத் திட்டத்தை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ள வேளையில் டெண்டர்கள் கோரப்பட்டு குத்தகையாளருக்கு ஒப்புதல் கடிதமும் வழங்கப்பட்டு விட்டதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஆர் ரமணன் கூறினார்.
இந்த திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும் சுங்கை சுபாங்கில் ஒரு கோடியே 60 லட்சம் வெள்ளி செலவில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதுவரை எந்த பிரதமரும் சுங்கை பூலோவில் இவ்வளவு பெரிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததில்லை. இதற்காக தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியின் கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்வை இன்று இங்கு தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.
வெள்ள அபாயத்தைக் குறைக்க மற்றொரு திட்டமும் உள்ளது. அதாவது 78 கோடி வெள்ளி செலவிலான சுங்கை பூலோ இரண்டாம் கட்ட வெள்ளத் தடுப்புத் திட்டம் அதுவாகும். அத்திட்டம் இன்னும் பரிந்துரை அளவில் உள்ளது என்றார் அவர்.
சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி உட்பட நாடு முழுவதும் வெள்ள அபாயத்தை குறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்று தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சருமான ரமணன் தெரிவித்தார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியின் பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ள நிலைமை குறித்து கருத்துரைத்த ரமணன், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், நாடாளுமன்ற சேவைக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.








