ஷா ஆலம், செப். 4- மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு
தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு
அவசரகால உதவி நிதியாக தலா 1,000 வெள்ளி வழங்கப்படும்.
பேரிடரை எதிர்நோக்கியுள்ளவர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான
இந்த நிதியுதவித் திட்டத்தை பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகம்
ஒருங்கிணைக்கும் என்று பேரிடர் மேலாண்மைத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிலாங்கூரில் நாம் சிறப்புத்
திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இந்த உதவித் நிதியைப் பெறுவதற்கு
ஏதுவாக பாதிக்கப்பட்டவர்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்களைப்
பதிந்து கொள்வது அவசியமாகும் என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இங்குள்ள பாயா ஜெராஸ், டேவான்
எம்.பி.எஸ்.ஏ. ஸ்ரீ பாகியில் தங்கியுள்ளவர்களை இன்று சந்தித்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக கடந்த புதன்
கிழமை முதல் இங்கு மூன்று தற்காலிக நிவாரண மையங்கள்
திறக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
பெட்டாலிங் மாவட்ட நில அலுவலகத்தின் கெனாங்கா மண்டபத்தில்
திறக்கப்பட்டுள்ள துயர் துடைப்பு மையத்தில் 64 குடும்பங்களைச் சேர்ந்த
265 பேரும் டேவான் எம்.பி.எஸ்.ஏ. மாத்தாஹாரியில் 14 குடும்பங்களைச்
சேர்ந்த 48 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள நிலைமை சீரடைந்த நிலையில் ஸ்ரீ பாகி எம்.பி.எஸ்.ஏ.
மண்டபத்தில் தங்கியிருந்த 26 குடும்பங்களைச் சேர்ந்த 101 பேரும் இன்று
பிற்பகல் வீடு அனுமதிக்கப்பட்டனர்.
வெள்ளம் காரணமாக கோம்பாக், பெட்டாலிங் மற்றும் கோம்பாக்
மாவட்டங்களில் 480 குடும்பங்களைச் சேர்ந்த 1,068 பேர் ஆறு தற்காலிக
துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.








