கோலாலம்பூர், அக். 4- சிறுவன் ஒருவனை துன்புறுத்தியது தொடர்பில் ஜி.ஐ.எஸ்.பி. ஹோல்டிங்ஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்துடன் தொடர்பு படுத்தப்படும் சமூக நல இல்லம் ஒன்றின் பராமரிப்பாளர் மீது செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
ரவாங், பண்டார் கன்ட்றி ஹோம்ஸில் உள்ள சமூக நல இல்லம் ஒன்றில் இவ்வாண்டு பிப்ரவரி காலை முதல் செப்டம்பர் வரை இக்குற்றத்தை புரிந்தாக முகமது ஷியாஹிட் ஹனாபியா (வயது 35) என்ற அந்த ஆடவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணை கோரினார். தனது பராமரிப்பில் இருந்த ஆறு வயதுச் சிறுவனுக்கு காயம் ஏற்படும் அளவுக்கு பிரம்பால் அடித்து துன்புறுத்திய குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.
அவ்வாடவருக்கு எதிராக 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவு
மற்றும் அதே சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க வகை செய்யும் 31(1)
பிரிவின் கீழ் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50,000
வெள்ளி வரையிலான அபராதம் அல்லது 20 ஆண்டுகள் வரையிலான
சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
முன்னதாக, இவ் வழக்கில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் நுர்லியா
எலியானா நோர் அஸ்மால் குற்றஞ்சாட்டப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்கக்
கூடாது என நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
நீதிமன்றம் தனது விவேகத்திற்கு உட்பட்டு முகமது ஷியா ஹிட்டுக்கு ஜாமீன் வழங்க முன்வந்தாலும் ஜாமீன் தொகையை 20,000 வெள்ளியாகவும் கூடுதல் நிபந்தனையாக பாதிக்கப்பட்டவரை தொந்தரவு செய்யக்கூடாது, போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் மற்றும் அதிகாரிகள் அழைக்கும் போதெல்லாம் விசாரணைக்கு வரவேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
குற்றஞ்சாட்டப் பட்டவரை 10,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி
வழங்கிய நீதிபதி லைலதுல் ஜூரைடா ஹருண், அரசுத் தரப்பின்
அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றும்படி உத்தரவிட்டார்.








