சைபர் ஜெயா, செப். 28 - வரும் 2027 ஆம் ஆண்டிற்குள் ரூமா இடமான் முன்னெடுப்பின் கீழ் 60,000 கட்டுபடி விலை வீடுகளை நிர்மாணிக்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த முன்னெடுப்பின் கீழ் வீடுகளை நிர்மாணிக்கும் பணி சீராக நடைபெற்று வரும் வேளையில் 40,000 வீடுகள் தற்போது தொடர்புடைய தரப்பினரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று அவர் சொன்னார்.
ரூமா இடமான் முன்னெடுப்பின் கீழ் ஒப்புதல், திட்டமிடல் அனுமதி மற்றும் செயல்முறை, கட்டிட அனுமதிக்காக ஏறக்குறைய 40,000 வீடுகள் காத்திருக்கின்றன என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு ரூமா இடமான், புத்ரா இடமான் மற்றும் சௌஜானா இடமான் ஆகிய வீடமைப்புத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவைத் தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது 10,000 வீடுகள் கட்டுமானத்தில் உள்ளன. அவற்றை 2026 அல்லது 2027க்குள் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம். மேலும் 60,000 வீடுகளை (ரூமா இடமான் முன்னெடுப்பின் கீழ்) உருவாக்குவோம் என்று அவர் கூறினார்.
இடமான் என்பது என்பது வியூக நகர்ப்புற மையங்களில் தரமான மற்றும் மலிவு விலை வீடுகளுக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கான மாநில அரசின் ஒரு வெற்றிகர முயற்சியாகும்.
இந்த முன்னெடுப்பின் கீழ் பி40 மற்றும் எம்40 தரப்பினருக்கு குறிப்பாக சிறிய குடும்பங்களைச் சேர்ந்த மலேசியர்களுக்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட குடியிருப்புகள் வழங்கப்படுகிறது.








