புத்ராஜெயா, செப். 28- நாட்டில் ஏடிஸ் கொசுக்களின் பெருக்கத்திற்கான காரணங்களில் ஒன்றாக பருவநிலை மாற்றமும் விளங்குவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
சீதோஷணநிலை மாற்றம் ஏற்படும் போது கொசுக்களின் பெருக்கம் தீவிரமடைவதாக அவர் சொன்னார்.
மணல் பொறிப் பகுதி போன்ற கட்டமைப்பு அம்சங்களும் இதற்கு காரணமாக விளங்குகின்றன. மணல் பொறிப் பகுதிகள் ஏடிஸ் கொசுக்கள் வளரும் இடங்களாக உள்ளதை நான் கவனித்துள்ளேன். சுகாதார நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத வளாகங்களின் கூரைப் பகுதிகளும் லார்வாக்கள் வளரும் இடங்களாக திகழ்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு நடைபெற்ற ஒரு மணி நேர மலேசிய துப்புரவு இயக்கத்தின் கீழ் ஏடிஸ் கொசுக்களுக்கு எதிரான மெகா கோத்தோங் ரோயோங் 2.0 திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
டிங்கி காய்ச்சல் பரவலுக்கு சீதோஷண நிலையும் ஒரு காரணமாக விளங்குவதாக சுகாதார அமைச்சு நேற்று கூறியிருந்தது.
நாட்டில் பருவநிலை மாற்றம் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கி வரும் நவம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இம்மாதம் 15 முதல் 21 வரையிலான நாட்டின் 38வது நோய்த் தொற்று வாரத்தில் இரு மரணங்கள் உள்பட 1,514 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருந்தது.
மாவட்ட சுகாதார அதிகாரிகள், சுகாதார கிளினிக்குகள், நடத்தை மாற்றத்திற்கான தன்னார்வலர் குழுக்களின் வாயிலாக டிங்கி பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அமைச்சு தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஜூல்கிப்ளி கூறினார்.








