குளுவாங், செப். 28- மக்கோத்தா தொகுதி சட்டமன்ற உறுப்பினரைத்
தேர்ந்தெடுப்பதற்கு தொகுதியிலுள்ள 61,274 வாக்களர்கள் இன்று தங்கள்
ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவுள்ளனர்.
இந்த தேர்தலை முன்னிட்டு 109 வாக்களிப்புத் தடங்களை உள்ளடக்கிய
இருபது வாக்குச்சாடிகள் இன்று காலை 8.00 மணிக்குத் திறக்கப்பட்டன.
இந்த வாக்குச்சாவடிகள் அனைத்தும் மாலை 6.00 மணிக்கு மூடப்படும்.
கடந்த 24ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடக்கக் கட்ட
வாக்களிப்பில் 4,510 இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின்
துணைவியரும் 401 போலீஸ்காரர்கள் மற்றும் அவர்களின்
துணைவியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த தொகுதியில் மொத்தம் 66,318 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 56
விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் ஆவர். சீன வாக்காளர்களின்
எண்ணிக்கை 34 விழுக்காடாகவும் இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை
எட்டு விழுக்காடாகவும் உள்ளது.
இந்த இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் சைட் ஹூசேன் சைட்
அப்துல்லாவுக்கும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் முகமது
ஹைசான் ஜாபருக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஷரிபா அஜிசா சைட் ஜைன்
(வயது 63) கடந்த ஆகஸ்டு மாதம் 2ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து
இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.








