ஷா ஆலம், செப். 28- இந்நாட்டில் ஹலால் சான்றிதழுக்கான விண்ணப்பங்களுக்கு போதுமான வரவேற்பு கிடைக்காமல் போனதற்கு தொழில் முனைவோர் மற்றும் தொழில் ஆர்வலர்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லாததே காரணமாக விளங்குகிறது.
ஹலால் சான்றிதழின் கோட்பாடு, சட்டத் தேவைகளின் அடிப்படையில் மட்டுமல்லாது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உணவுத் தரம் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது என்று ஹலால் அகாடமியின் இயக்குநர் ஹரிட்யாந்தி பென் கூறினார்.
அவர்களுக்கு (தொழில் துறையினர்) போதுமான ஹலால் விழிப்புணர்வு இல்லை. மலேசியாவில் ஹலால் சான்றிதழின் கோட்பாடு ஹலால் தொய்யிபானை (முழுமையானது) அடிப்படையாகக் கொண்டது என்று தெரிவித்தார்.
உணவு, பானங்கள், அழகுசாதனப் பொருட்கள், ஹோட்டல்கள் போன்ற ஒன்பது துறைகள் ஹலால் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கப் படுகின்றன என்று சிலாங்கூர் டிவியின் ஹாய் சிலாங்கூர் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் விளக்கினார்.
புத்தாக்கம் மற்றும் தொழில் முறை மேம்பாட்டில் ஹலால் திறனை நிர்வகிப்பதில் இஸ்லாமிய மேம்பாட்டுத் இலாகாவுக்கு (ஜாக்கிம்) பொறுப்பான பயிற்சி மேற்பார்வையாளராக ஹலால் அகாடமி செயல்படுகிறது.
இதற்கிடையில், ஹலால் சான்றிதழின் மூலம் ஹலால் தொழில் சூழலை தரப்படுத்த முடியும் என்று ஹலால் இண்டர்நேஷனல் சிலாங்கூர் (எச்.ஐ.எஸ்.) தொய்யிபா சென். பெர்ஹாட் பொது நிர்வாகி முகமது சியாரில் செளகத் அலி தெரிவித்தார்.
மேலும், மலேசியாவின் ஹலால் சான்றிதழ் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் வழி நமது வணிகங்கள் சர்வதேச சந்தையில் ஊடுருவுவதற்கான வாய்ப்புகளை வழங்க முடியும் என்பதோடு அதன் மூலம் பொருளாதாரத்தையும் மேம்படுத்த இயலும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஹலால் சான்றிதழ் விண்ணப்பதாரர்களின் மொத்த எண்ணிக்கையில் 30 சதவீதம் மட்டுமே பூமிபுத்ரா தொழில்முனைவோரை உள்ளடக்கியுள்ளதை ஜாக்கிமின் தரவுகள் காட்டுகின்றன.








