ஷா ஆலம், செப். 28 - வெள்ளப் பிரச்சனை மீண்டும் ஏற்படாமல் தடுக்க கோத்தா கெமுனிங் தொகுதி நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி மன்ற அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு நல்கி வருகிறது.
வரும் நவம்பர் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பருவமழை மாற்றக் கட்டத்தை எதிர் கொள்வதற்கு ஏதுவாக உரிமையாளர் இல்லாத கால்வாய்கள் உட்பட அனைத்து வடிகால் களையும் பராமரிப்பது தாங்கள் செயல்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று அதன் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஷ் கூறினார்.
கோத்தா கெமுனிங் தொகுதி எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் வடிகால் பராமரிப்பும் ஒன்றாகும். ஏனெனில் எங்களிடம் உரிமை கோரப்படாத சுமார் ஒரு கிலோமீட்டர் வடிகால்கள் உள்ளன. அவற்றை எங்களால் சரியாக நிர்வகிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், சிலாங்கூர் முழுவதும் உரிமை கோரப்படாத வடிகால் பிரச்சினையைத் தீர்க்க 50 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கீட்டிற்கு மாநில அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. எனவே, மேற்கூறிய மூன்று துறைகளுடன் இணைந்து அதனை நாங்கள் அதை நிவர்த்தி செய்யத் தொடங்குவோம் என்று சிலாங்கூர் கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு சம்பவம் குறித்து கருத்துரைத்த பிரகாஷ், ஜாலான் கெபுன் மற்றும் கோத்தா கெமுனிங்கில் சில பகுதிகளை மட்டுமே பாதித்த இந்த வெள்ளம் இரண்டு மணி நேரத்திற்குள் தணிந்து விட்டது என்றார்.
இந்த முறை ஏற்பட்ட வெள்ளம் தாமான் ஸ்ரீ மூடாவை பாதிக்கவில்லை. எங்கள் திட்டமிடல் பயனுள்ளதாக இருந்ததை இது காட்டுகிறது. இருப்பினும், ஜாலான் கெபுனை ஒட்டிய குடியிருப்பு மற்றும் தொழில்துறை மண்டலங்கள் போன்ற சில பகுதிகளில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த புதன்கிழமை மூன்று மணிநேரம் தொடர்ச்சியாக பெய்த கனமழையைத் தொடர்ந்து ஜாலான் கெபுன் மற்றும் கோத்தா கெமுனிங் வட்டாரத்தின் பல தாழ்வான பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.








