அலோர் ஸ்டார், செப். 25- இன்று காலை 8.00 மணி நிலவரப்படி கெடா மாநிலத்தில் வெள்ளம் காரணமாக துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை 1,745 குடும்பங்களைச் சேர்ந்த 5,454 பேராக குறைந்துள்ளது. நேற்றிரவு 1,788 குடும்பங்களைச் சேர்ந்த 5,592 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியிருந்தனர்.
இம்மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள 29 வெள்ள துயர் துடைப்பு மையங்களில் அவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் அறிக்கை கூறியது.
கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் மிக அதிகமாக அதாவது 1,196 குடும்பங்களைச் சேர்ந்த 3,672 பேர் 16 நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். அதற்கு அடுத்து பெண்டாங் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 10 துயர் துடைப்பு மையங்களில் 478 குடும்பங்களைச் சேர்ந்த 1,565 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 153 பேரும் பொக்கோ செனா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மையத்தில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேரும் தங்கியுள்ளனர்.








