கோலாலம்பூர், செப். 21- கெஅடிலான் கட்சியின் பேரணியில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களின் ரிபோர்மாஸி முழக்கத்தால் புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரங்கம் அதிர்ந்தது.
கெஅடிலான் போராட்டத்தை ஆதரிக்கும் ஓட்டாய் ரிபோர்மாஸி அமைப்புடன் இணைந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடத்தப்பட்ட நீதிக்கான தொடக்க காலப் போராட்டத்தை இந்த பேரணி நினைவுப்படுத்தியது.
நேற்று மாலை 6.00 மணிக்கு தொடங்கிய இந்த பேரணியில் கட்சியின் பல முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டு கெஅடிலான் போராட்டத்தில் தாங்கள் ஆற்றியு பங்கினையும் தியாகத்தையும் நினைவுக் கூர்ந்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தலைவர்களில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, கட்சியின் தலைமைச் செயலாளர் பவுஸியா சாலே, தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி பாட்சில், பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ சம்சுல் இஸ்கந்தார் முகமது அகின் ஆகியோரும் அடங்குவர்.
கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி டத்தாரான் மெர்டேக்காவில் ரிபோர்மாஸி இயக்கம் தொடங்கியதை நினைவுக்கூறும் விதமாக இந்த பேரணியை செப்டம்பர் 20ஆம் தேதி நடத்த முடிவெடுக்கப்பட்டதாக கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
அந்த ரிபோர்மாஸி இயக்கம் நாடு முழுவதும் உள்ள அனைத்து நிலையிலான மக்களையும் ஒன்று திரட்டுவதில் வெற்றி கண்டதைத் தொடர்ந்து கெஅடிலான் என்ற பெயரில் பார்ட்டி கெஅடிலான் நேஷனல் கடந்த 1999ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உதயமானது.
செப்டம்பர் 20ஆம் தேதி ஒரு கருப்பு தினமாகும். அன்றைய தினம்தான் அன்வார் இப்ராஹிம் புக்கிட் டாமன்சாராவிலுள்ள தனது வீட்டில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி அலையை ஏற்படுத்தியது.








