கோலாலம்பூர், செப். 17 - கடந்த ஆண்டு செராஸில் உள்ள மக்கள் வீட்டு வசதி குடியிருப்பு திட்டத்தின் (பிபிஆர்) வாகன நிறுத்துமிடத்தில் ஆடவர் ஒருவரை கடத்தியதாக வேலையில்லாத மூன்று நர்கள் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் செராஸ், கம்போங் முஹிபா பிபிஆர் குடியிருப்பு பகுதியில் பலத்த காயத்தை ஏற்படுத்தும் நோக்கில் 27 வயது இளைஞரை கடத்தியதாக முகமது இசுல் ஹைகல் ஜைனோடின் (வயது 35 ), ஜைரின் இடஸ்வான் முகமது ஹஸ்லின் (வயது 33) மற்றும் ஹோனிஸாம் ஹம்சா (வயது 41) ஆகிய மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 367 மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 34இன் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் நீதிபதி சித்தி ஷகிரா மொக்தாருடின் ஜாமீன் வழங்கவில்லை. வழக்கின் அடுத்த விசாரணையை அவர் செப்டம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. அதே சமயம் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் நிட்சுவான் அப்துல் லத்திப் ஆஜரானார்.








