கோலாலம்பூர், செப் .17- மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள விருக்கிறார். மாமன்னரின் இந்த வரலாற்றுப்பூவ பயணம் ஐம்பது ஆண்டுகள் நிறைவடையும் சீன-மலேசிய அரச தந்திர உறவில் புதிய அத்தியாயத்தை தொடக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
மாமன்னரின் இந்த பயணம் மலேசியாவுக்கும் அந்த சீனப் பெருஞ்சுவர் நாட்டிற்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயத்தையும் அணுக்கமான நட்புறவையும் ஏற்படுத்தும் என்று இஸ்தானா நெகாரா வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் அந்த குடியரசு நாட்டுடனான உறவின் வாயிலாக மலேசியாவுக்கு பல்வேறு அனுகூலங்கள் கிடைத்துள்ளது என பேரசர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலக்கவியல் பொருளாதாரம், தொழில்துறை, பசுமை மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் அந்நாடு கொண்டிருக்கும் நிபுணத்துவத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள இயலும் என நான் நம்புகிறேன் என்று மாமன்னர் அரச ஊடக அலுவலகத்திடம் தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது சீனப் பிரதமர லீ கியோங் மற்றும் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் பேரரசர் சந்திப்பு நடத்துவார்.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பெய்ஜிங் பொது விமானத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்திற்கு (கோமேக்) வருகை புரியும் மாமன்னர் சீனாவின் விமானத் தொழில்நுட்பத்தின் மேம்பாடுகளைக் கண்டறிவார்.
சீனாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த மலேசியர்களையும் மாமன்னர் இந்த பயணத்தின் போது சந்திக்கவுள்ளார். பெய்ஜிங் அந்நிய ஆய்வு பல்கலைக்கழகத்தில் உள்ள மலாய் ஆய்வியல் துறையை தமது பெயரில் உருமாற்றம் செய்யும் நிகழ்வுக்கும் அவர் தலைமையேற்பார்.








