கோலாலம்பூர், செப். 16 - சுதந்திரம் மற்றும் சுயேச்சையான மலேசியா என்ற உண்மையான அர்த்தத்தை மலேசியர்கள் ஏற்றுக்கொண்டு பிரிவினையையும் விரோதத்தையும் நிராகரிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மலேசியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நாட்டின் ஆற்றல் மற்றும் திறன்களை உயர்த்த அனைத்து மலேசியர்களும் ஒற்றுமையை நிலை நிறுத்த வேண்டும் என இன்று அவர் தனது முகநூல் பதிவில் வலியுறுத்தினார்.
ஆண்டுதோறும் நடைபெறும் மலேசியா தினக் கொண்டாட்டம், இனம், மதம், கலாச்சாரம் ஆகியவற்றைக் கடந்து தேசத்தின் மீதான அன்பையும் மக்களிடையே ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
நமது நேசத்திற்குரிய நாடான மலேசியாவுக்கு 61 வயதாகிறது. இந்த காலகட்டத்தில் நாம் பல்வேறு சவால்களை சமாளித்து வலுவாக உருவெடுத்துள்ளோம். அனைவருக்கும் 61 வது மலேசியா தின வாழ்த்துக்கள் என்று அன்வார் கூறினார்.
கடந்த 1963 ஆம் ஆண்டு மலேசியா உருவானதை நினைவுகூரும் வகையில் செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசியா தினம் கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டுக்கான தேசிய அளவிலான மலேசியா தின கொண்டாட்டம் சபாவில் உள்ள கோத்தா கினாபாலுவில் உள்ள பாடாங் மெர்டேகாவில் இன்றிரவு நடைபெறவுள்ளது.








