புதுடெல்லி, செப் 9 - எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மை நோய் பீடித்த நாட்டிலிருந்து இந்தியா வந்த நபர் ஒருவர் அந்நோயைத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அந்நோயாளியின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது.
அந்தக் நோயாளிக்கு எந்த வகையான எம்பாக்கஸ் வைரஸ் இருக்கலாம் என்று அது குறிப்பிடவில்லை. ஆனால் தொற்று நோயை உறுதிப்படுத்தும் சோதனைகள் நடத்தப்பட்டன.
நெருங்கிய தொடர்பு மூலம் எம்பாக்ஸ் பரவலாம். பொதுவாக லேசான பாதிப்பையே இந்நோய் ஏற்படுத்தும். அரிதான சந்தர்ப்பங்களில் ஆபத்தானதாகவும் அது மாறும். காய்ச்சல் போன்ற அறிகுறிகளையும் உடலில் சீழ் நிறைந்த புண்களையும் இந்நோய் ஏற்படுத்துகிறது.
நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்நோய் நிர்வகிக்கப் படுவதோடு இந்நோய்க்கான மூல காரணங்களை அடையாளம் காணவும் இதனால் நாட்டிற்கு ஏற்படும் தாக்கத்தை மதிப்பிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சு கூறியது.
ஆப்பிரிக்காவில் ஒரு புதிய வகை எம்பாக்ஸ் ஆபத்தான வைரஸாக மாறியதிலிருந்து இந்தியா விழிப்புடன் இருப்பதாக தி ஹிந்து நாளேடு கடந்த மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.
புதிய பிறழ்வு அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் இந்த நோய்ப் பரவலை அனைத்துலக கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது.
கடந்த 2022 மற்றும் மார்ச் 2024ஆம் ஆண்டிற்கு இடையே கிளாட் 2 எனப்படும் 30 குரங்கம்மை சம்பவங்களை இந்தியா கண்டறிந்துள்ளது.


