கோல திரங்கானு, செப் 9 - மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது மைத்துனியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் புல் வெட்டும் தொழிலாளி ஒருவருக்கு இங்குள்ள நீதிமன்றம் 42 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 30 பிரம்படிகளும் விதித்தது.
இந்த வழக்கில் 39 வயதான பிரதிவாதியின் தற்காப்பு வாதம் முடிவடைந்ததை தொடர்ந்து செஷன்ஸ் நீதி மன்ற நீதிபதி நூரியா ஒஸ்மான் அவருக்கு இத்தண்டனையை விதித்தார்.
பாதிக்கப்பட்ட அப்பெண்ணை கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு முறையும் அதே ஆண்டு ஜூலை மாதம் இரண்டு முறையும் மாராங்கில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அந்த ஆடவருக்கு எதிரான குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது
குற்றம் நிரூபிக்கப்பட்டால் எட்டு முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்தபட்சம் 10 பிரம்படியும் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 376(3)வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றத்தின் தீவிரம் மற்றும் அவருக்கும் பாதிக்கப் பட்டவருக்கும் இடையிலான குடும்ப உறவினை கருத்தில் கொண்டு பிரதிவாதிக்கு கடுமையான மற்றும் பொருத்தமான தண்டனை வழங்குவது அவசியம் என்று நீதிபதி நூரியா தனது தீர்ப்பில் வலியுறுத்தினார்.
அந்நபருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 பிரம்படிகளும் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். முதலாவது குற்றச்சாட்டிற்கான தண்டனை, தீர்ப்பு விதிக்கப்பட்ட நாளிலிருந்து தொடங்கும். அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றங்களுக்கான தண்டனை முதலாவது தண்டனை முடிந்த பிறகு ஏககாலத்தில் தொடங்கும்.


