ஜோகூர் பாரு, செப். 9- இம்மாவட்டத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஓப் செர்காப் நடவடிக்கையின் வாயிலாக மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய பிச்சை எடுக்கும் அன்னிய கும்பலை மலேசிய குடிநுழைவு துறையினர் முறியடித்துள்ளனர்.
மாலை 4.20 மணி அளவில் நடத்தப்பட்ட அந்த சோதனையில் 51 முதல் 63 வயது வரையிலான மூன்று ஆடவர்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில குடிநுழைவு துறையின் இயக்குநர் டத்தோ முகமது ருஸ்டி முகமது டாருள் கூறினார்.
பொது மக்களிடமிருந்து குடிநிழைவுத்துறைக்கு கிடைத்த தகவல் மற்றும் இரண்டு மாதங்களாக நடத்தப்பட்ட உளவு நடவடிக்கையின் வாயிலாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
ஒன்று கூடும் மையமாகவும் வசூலிக்கப்பட்ட தொகையை ஒப்படைக்கும் இடமாகவும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை அன்னிய பிரஜைகளை கொண்ட அக்கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார்.
இரு பெண்களால் வழிநடத்தப்பட்ட இந்த கும்பல் ஒரு கை மற்றும் கால் இழந்த ஆண் சகாக்களை பயன்படுத்தி பிச்சை எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு அவர்களை வழி நடத்துபவர்களாகவும் கிடைக்கும் வருமானத்தைப் பிரித்துக் கொடுப்பவர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
தங்களிடம் உள்ள உடல் குறைபாடுகளைப் பயன்படுத்தி மக்களின் அனுதாபத்தை பெறுவது, உடல் வலியால் துடிப்பது போல் நடிப்பது உள்பட பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி இக்கும்பல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக குடிநுழைவு துறையின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர் குறிப்பிட்டார்.
அந்த பிச்சைக்காரர்கள் மாதம் 2,400 வெள்ளி முதல் 12,000 வெள்ளி வரை வருமானம் ஈட்டியுள்ளதோடு அவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் 1,200 வெள்ளி வழங்கப்பட்டு வந்துள்ளது என அவர் சொன்னார்.


