செய்தி ஆர்.ராஜா
ஷா ஆலம், செப். 7- இந்நாட்டில் தமிழுக்காகவும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காகவும் அளப்பரிய பங்கு ஆற்றிய தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஐவருக்கு சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நல்லாசிரியர் விருது வழங்கப் பட்டது.
கிள்ளான் ஹைலண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றிய டாக்டர் வேலாயுதம் த/பெ பொன்னையா, பேராக் ரிவர் வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றிய ஹரிஹரன் த/பெ கித்தப்பன், ரவாங் தமிழ்ப்பள்ளியில் பணியாற்றிய டாக்டர் ராஜேஸ்வரி த/பெ ஆறுமுகம், ரவாங் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றிய கஞ்சினமலை த/பெ கோவிந்தசாமி, கோலக் கிள்ளான், ஜாலான் வாட்சன் தமிழ் பள்ளியில் பணியாற்றிய திருமதி இந்திராணி த/பெ வெள்ளையன் ஆகியோரே விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அந்த ஐந்து தலைமை ஆசிரியர்கள் ஆவர். 
இங்குள்ள சுங்கை ரெங்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மையத்தில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டு தலைமையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் அவர்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவிக்கப் பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.
சமூகத்திற்காகவும் தமிழுக்காவும் பாடுபட்டவர்கள் என்ற முறையில் ஐந்து தலைமையாசியர்கள் இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டதாக பாப்பா ராய்டு குறிப்பிட்டார்.
இருப்பினும், வரும் காலங்களில் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்ப் பத்திரிகையாளர்களையும் கௌரவிக்கும் திட்டத்தை தாங்கள் கொண்டுள்ளதாக அவர் சொன்னார். 
தமிழ் அறிஞர்களும் தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தான் இந்த நாட்டில் தமிழ் மொழியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப் படுவது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்த நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்வை மாநில அரசு நடத்தி வருவதாகக் கூறிய அவர், இந்த சிறப்பான திட்டத்தில் முதன் முறையாகத் தொடக்கி வைத்த முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
தமிழாசிரியர்கள் ஆற்றிய சேவையுடன் ஒப்பிடுகையில் இந்த விருது சாதாரணமாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதற்காக இந்த திட்டத்தை தொடர்ந்து நடத்த நாங்கள் உத்தேசித்துள்ளோம் என்றார் அவர்








