விளாடிவோஸ்டோக், செப்.6 - மலேசியா மற்றும் ரஷ்யா இடையே சுற்றுப் பயணிகளின் வருகையை அதிகரிக்க நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசியா நட்புறவான நாடு என்பதோடு அது எந்த சக்தியாலும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிய அன்வார், பொருளாதார ரீதியில் சிக்கனமான உணவு , வளம் கொழிக்கும் கலாச்சாரம் மற்றும் நட்புறவான நாடான மலேசியாவிற்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வருகை தர வேண்டும் என்றார்.
பல்லின சமூகம், வெப்பமண்டல காடுகள், கடற்கரைகள் மற்றும் பூமத்திய ரேகை பருவநிலை ஆகியவற்றைக் கொண்டுள்ள மலேசியா, கலாச்சார ரீதியாக துடிப்பான ஒரு நாடு. மலேசியா சென்றால் உண்மையிலேயே ஆசியாவை நீங்கள் காணலாம் என்றார் அவர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன துணையதிபர் ஹான் ஜெங் ஆகியோர் கலந்து கொண்ட 9வது கிழக்குப் பொருளாதார மன்ற ஆய்வரங்கின் பிரதான அமர்வின் கேள்வி-பதில் அங்கத்தின் போது அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக, மாநாடு முடிந்து தாயகம் புறப்படும் முன்னர் மலேசிய ஊடகங்களுடன் சந்திப்பு நடத்திய அன்வார், மலேசியா கடந்தாண்டு 100,000 ரஷ்ய சுற்றுப் பயணிகளை ஈர்த்ததாகவும் மேலும் அதிக விமானச் சேவைகள் வழி ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சாத்தியம் உள்ளது என்றும் சொன்னார்.
தற்போது, இரு நாடுகளையும் இணைக்க, சீனா வழியாகப் போக்குவரத்து விமானச் சேவை மட்டுமே உள்ளது.


