விளாடிவோஸ்டோக், செப். 5 - சரவாக் கடல் பகுதியில் மலேசியா தனது நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்தாலும் தனது எல்லைக்குள் எண்ணெய் ஆய்வுகளை நாடு தொடரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவினால் மேற்கொள்ளப்படும் எண்ணெய் ஆய்வுகள் நாட்டின் கடல் எல்லைக்குள் இருப்பதாகத் தாம் உறுதியாக நம்புவதாகக் கூறிய அவர், தனது நிலைப்பாட்டை அது சீனாவிடம் விளக்கும் என்றார்.
சீனா எங்கள் நண்பர். ஆனால், நமது பிராந்தியத்தில் எண்ணெய் வளத்தைக் கண்டறிய துளையிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை நமது நீர்ப் பகுதியில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் சொன்னார்.
பெய்ஜிங் ஆட்சேபக் குறிப்பை அனுப்பியிருந்தாலும் அது நமது பகுதி என்று கருதுவதால் நம் நாட்டின் பொருளாதார வாழ்வாதாரத்திற்காக துளையிடும் நடவடிக்கைகளைத் தொடர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
ஒன்பதாவது கிழக்குப் பொருளாதார ஆய்வரங்கில் கலந்து கொண்டப் பின்னர் ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமான விளாடிவோஸ்டாக்கிலிருந்து தாயகம் புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மலேசியாவும் சீனாவும் எப்பொழுதும் தங்களின் பிரச்சனைகளை நட்பு ரீதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் பிரதமர் கூறினார்.
மலேசியாவின் கடல் எல்லை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள் அமைந்திருந்தாலும் சரவாக் கடல் பகுதியில் உள்ள வளங்கள் நிறைந்த பகுதியில் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நடவடிக்கைகளையும் மலேசியா நிறுத்த வேண்டும் என்று பெய்ஜிங் தூதரக குறிப்பு மூலம் சீனா கோரியுள்ளதாக சமீபத்தில் வெளியான செய்தி அறிக்கைகள் தெரிவித்தன.
இதற்கிடையில், பொருள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) திரும்ப அமல்படுத்தும் சாத்தியம் பற்றிய பேச்சை அன்வார் நிராகரித்தார். மானியக் குறைப்புகளுக்கு மாற்றாக அத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசாங்கம் விவாதிக்கவில்லை என்று அவர் கூறினார்.


