விளாடிவோஸ்டோக், செப். 5 - பிரிக்ஸ் அமைப்பில் (பிரேசில், ரஷ்யா,
இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) உறுப்பியம் பெறுவதற்கு முன்னுரிமை
அளிக்கப்படும் நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடினுடன் நேற்று நடத்திய சந்திப்பில், பிரிக்ஸ்
அமைப்பில் மலேசியா உடனடியாக சேர்வதா? அல்லது பங்காளி நாடு
என்ற நிலையில் இருந்து தொடங்குவதா? என்பது முக்கிய அம்சமாக
இருந்தது என்று அவர் சொன்னார்.
உறுப்பினர் அல்லாத நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பின்
அடிப்படையில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் நாடுகளில் நமது நாடு
ஒன்று என்பது இதில் முக்கிய விஷயமாகும் என அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவுக்கான பணி நிமித்தப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம்
புறப்படும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இதனைக்
குறிப்பிட்டார்.
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான மலேசியாவின் வாய்ப்பு குறித்து
கருத்துரைத்த பிரதமர், இதன் தொடர்பில் சீன மற்றும் இந்திய பிரதமர்கள்
மற்றும் ரஷ்யா, பிரேசில் அதிபர்களுடன் தாம் நடத்திய பேச்சுகள் மிகவும்
நேர்மறையானதாக இருந்ததாக சொன்னார்.
எதிர்வரும் அக்டோபர் 22 முதல் 24ஆம் தேதி வரை ரஷ்யாவின் காஸான்
நகரில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டில் கலந்து
கொள்ள ரஷ்ய அதிபர் தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அன்வார்
குறிப்பிட்டார்.
அடுத்த மாதம் நிறையை வெளிநாட்டு நிகழ்வுகள் உள்ளதால் அந்த
மாநாட்டில் நேரடியாகப் பங்கேற்பதா அல்லது பிரதிநிதியை அனுப்பி
வைப்பதா என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார் அவர்.


