ஷா ஆலம், செப். 5 - அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை
வலுப்படுத்துவது உள்பட ரஷ்யாவுடன் உண்மையான வாய்ப்புகளை
கண்டறிய மலேசிய தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.
ரஷ்யாவுடன் வட்டார அமைப்பான ஆசியான் ஒத்துழைப்பை
வலுப்படுத்துவதற்கான கடப்பாட்டையும் மலேசியா இச்சநதிப்பின் போது
வெளிப்படுத்தியதாக ரஷ்ய துறைமுக நகரான விளாடிவோஸ்டாக்
நகருக்கான பிரதமரின் பயணத்தில் இடம் பெற்றுள்ள மந்திரி பெசார்
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் ஆசியான் தலைவர் பொறுப்பை ஏற்கவுள்ள
மலேசியா, பல்வேறு துறைகளில் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பை அந்த
அமைப்பு வலுப்படுத்துவதும் கடப்பாட்டையும் பிரதமர் வெளிப்படுத்தினார்
என்று அவர் சொன்னார்.
ஒத்துழைப்பை வலுப்படுத்தும் துறைகளில் வர்த்தக ஒத்துழைப்பு, முதலீடு,
தொழில்நுட்ப மற்றும் தொழில்திறன் கல்வி (திவேட்), விவசாயம், உணவு
உத்தரவாதம் மற்றும் சுற்றுலா ஆகியவையும் அடங்கும் என்று அமிருடின்
தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற ரஷ்ய அதிபர்
விலாடிமிர் புடினுடனான சந்திப்பில் பங்கேற்ற பிரதமர் தலைமையிலான
பேராளர் குழுவில் அமிருடினும் இடம் பெற்றிருந்தார்.
இந்த சந்திப்பின் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை பலி
கொண்ட பாலஸ்தீனத்திற்கு எதிரான வன்முறை குறித்த மலேசியாவின்
கவலையையும் அன்வார் வெளிப்படுத்தினார்.
இம்மாதம் 22 முதல் 24 வரை கஸான் நகரில் நடைபெறவிருக்கும்
பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கப் புடின் மலேசியாவுக்கு அழைப்பு
விடுத்துள்ளது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக அமிருடின் சொன்னார்.


