கோல நெருஸ், செப் 1- மியன்மார் பிரஜைகள் சம்பந்தப்பட்ட மனித வர்த்தகத்தில் முன்னாள் துணையமைச்சர் ஒருவர் ஈடுபட்டதாக கூறப்படுவது தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது.
இவ்விவகாரத்தை உறுதிப்படுத்திய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், எனினும், இதன் தொடர்பில் மேல் விபரங்களை வெளியிட மறுத்து விட்டார்.
இக்குற்றச்சாட்டு தொடர்பில் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர். அவர்கள் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளதன் அடிப்படையில் காவல் துறை கொண்டிருக்கும் தொழில் நிபுணத்துவம் குறித்து நாம் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள பாலாய் ராயா பூலாவ் ரேடாங்கில் மேக்கார் எனப்படும் ‘மக்கள் அன்பு விதைப்பு நிகழ்வு‘ மற்றும் அடையாள ஆவணங்கள் ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மியன்மாரில் மனித வர்த்தகத்தில் அரசியல்வாதியும் அவரின் கணவரும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் விசாரணை நடத்தும்படிக் கோரி மலேசிய அனைத்துலக சமூக மனிதாபிமான் அமைப்பு ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அண்மையில் புகார் அளித்திருந்தது.
அண்மையில் லாவோஸ் நாட்டில் நடைபெற்ற எல்லை தாண்டிய குற்றச்செயல்கள் தொடர்பான ஆசியான் அமைச்சர் நிலை மாநாட்டின் முடிவுகளையும் அமைச்சர் சைபுடின் நிருபர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
மனிதக் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதை இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.








