கோலாலம்பூர், ஆக. 28- ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் கடந்த வெள்ளிக்கிழமை பெண்மணி ஒருவர் மாயமாவதற்கு காரணமான பூமி உள்வாங்கிய சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் நேற்று நள்ளிரவு மீண்டும் ஒரு மண் உள்வாங்கிய சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.
இன்று விடியற்காலை 2.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. நேற்றிரவு பெய்த புயலுடன் கூடிய அடை மழையின் காரணமாக மண் உள்வாங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்க சம்பந்தப்பட்ட இடத்தை பாதுகாப்பு குழுவினர் முழுமையாக மூடிவிட்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மண் உள்வாங்கிய சம்பவத்தில் ஆந்திர பிரதேசத்தின் குப்பம் எனும் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி (வயது 48) என்ற மாது எட்டு மீட்டர் ஆழத்தில் விழுந்து காணாமல் போனார்.
அந்த இந்திய மாதுவைக் தேடி மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.








