கோலாலம்பூர். ஆகஸ்ட் 25 ;- இன்று இந்திய திரும்பி செல்லவிருந்த விஜயலட்சுமியை தேடி கணவரும் மகனும் கண்ணீர் விடுவது மலேசியர்களிடையே அதிர்ச்சியையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை சாலை உள்வாங்கிய நேரத்தில் அவ்வழியே சென்று கொண்டிருந்த இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சுற்று பயணியான விஜயலட்சுமி என்பவர் அவ் விபத்தில் சிக்கி காணாமல் போனார்.
அவரைத் தேடும் பணிகளை முழு அளவில் மேற்கொண்ட மலேசிய மீட்பு குழுவினர், அவ்விடத்தை முழுமையாக தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றது. அவ்வழியே செல்லும் கழிவுநீர் பாதாள சுரங்கத்தின் நீரில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவ்வேளையில் விஜய வேட்சுமியின் கால் செருப்பு ஒன்று அங்கு நீரில் மிதக்க காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது.
காணாமல் போனவரின் கணவர் மற்றும் மகனின் துயர குரல் அப் பகுதியாக செல்லும் மக்களை மட்டும் துயரப்படுத்தவில்லை.
அவர்களின் துயரத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டுவும் ஈர்க்கப் பட்டுள்ளார். நேற்று சம்பவ இடமான ஜாலான் மஸ்ஜித் இந்தியாவுக்கு வருகை புரிந்து விஜயலட்சுமியை மீட்கும் முயற்சியை பார்வை யிட்ட அவர் அங்கு துயரத்தில் இருந்த விஜயலட்சுமியின் கணவருக்கு ஆறுதல் கூறினார்
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, மலேசியர்களின் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார். அதே வேளையில் கடும் மன உளைச்சலில் துயரிலும் உள்ள குடும்பத்தினர் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக விபத்து குறித்து சுயமாக கருத்து வெளியிடுவதை அனைவரும் நிறுத்தி கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டார்.
நாம் அனைவரும் மீட்பு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அரசு ஊழியர்களுக்கு நமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
விஜயலட்சுமியின் தேடி, அவரின் கணவரும் மகனும் இப்பொழுது கோலாலம்பூரில் இருக்கின்றனர்.








