கோலாலம்பூர், ஆக.18- ஊதிய உயர்வை உட்படுத்திய பொதுச் சேவை துறை சம்பள முறை (எஸ்.எஸ்.பி.ஏ.) தற்போது நிலவி வரும் ஆசிரியர்கள் முன்கூட்டியே பதவி ஓய்வு பெறும் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களுக்கு கல்வி போதிப்பதிலும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை சமாளிப்பதில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வரும் ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தின் இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு அர்த்தமுள்ள மகத்தான பரிசாக விளங்குகிறது என்று தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் தலைவர் அமினுடின் அவாங் கூறினார்.
இந்த அறிவிப்பின் வாயிலாக வருடாந்திர சம்பள உயர்வை மட்டுமின்றி மாதாந்திர சம்பளத்தில் அதிகரிப்பையும் பெறுவதற்குரிய வாய்ப்பை ஆசிரியர்கள் பெறுவர் என அவர் சொன்னார்.
கடந்த 12 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படாத நிலையில் மலேசிய சம்பள முறைக்கு (எஸ்.எஸ்.எம்.) பதிலாக எஸ்.எஸ்.பி.ஏ. முறை அமலாக்கப்பட்டது ஆசிரியர்களைப் பொறுத்த வரை அர்த்தமுள்ள ஒரு பரிசாகும் என்றார் அவர்.
ஆசிரியர்கள் முன்கூட்டியே பதவி ஓய்வு பெறும் பிரச்சனைக்கு இந்த சம்பள உயர்வு தீர்வு காணும் என எதிர்பார்க்கிறோம். அதோடு மட்டுமின்றி அரசின் இந்த பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பணிகளை மேலும் சிறப்பான முறையில் ஆற்றுவதற்குரிய உத்வேகத்தையும் ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த எஸ்.எஸ்.பி.ஏ. சம்பளத் திட்ட அமலாக்கம் தொடர்பான துல்லியமான விபரங்களை அரசாங்கம் வெளியிடும் எனத் தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த புதிய சம்பள முறை இரண்டு கட்டங்களாக அதாவது இவ்வாண்டு டிசம்பர் 1 தேதி மற்றும் வரும் 2026 ஜனவரி முதல் தேதிகளில் அமல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.








