பெட்டாலிங் ஜெயா, ஆக.18- அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கணிதத்
துறைகள் (ஸ்டெம்) வீழ்ச்சியை எதிர்நோக்குவதற்கு குறைந்த சம்பளம்,
போதுமான அளவு கட்டமைப்புகள் இல்லாதது உள்ளிட்டவை
காரணங்களாக விளங்குகின்றன.
இத்தகைய குறைபாடுகள் காரணமாக ஏற்படும் விளைவுகள் நாட்டில்
தொழில்நுட்ப புத்தாக்கம் குறைந்து காணப்படுவதற்கு வழி வகுப்பதாக
கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.
வெளிநாடுகளில் வேலை செய்யும் ஸ்டெம் துறைகளில் தேர்ச்சி பெற்ற
மலேசியர்களை மீண்டும் நாட்டிற்கு கவர்ந்திழுக்கும் முயற்சிகளை இது
கடினமாக்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சேவைத் துறை மற்றும் உயர்கல்வித் துறைகளில் அறிவியல் என
வரும் போது இந்த பிரச்சினை நிலவுகிறது. குறைந்த சம்பளம், அடிப்படை
வசதிகள் மற்றும் உபகரணப் பற்றாக்குறை, வர்த்தகமயமாக்கும்
வாய்ப்புகள் குறைவு ஆகியவை இதற்கு மூலகாரணமாக உள்ளன என்றார்
அவர்.
அரசாங்கம் முதலீடு செய்யாவிட்டால் நாம் எப்படி ஆராய்ச்சி மற்றும்
மேம்பாட்டில் ஈடுபட முடியும். இதனால்தான் நாட்டில் தொழில்நுட்ப
புத்தாக்கத்தில் குறைவான வளர்ச்சி காணப்படுகிறது என அவர் மேலும்
சொன்னார்.
நேற்று இங்குள்ள ஸ்டார்லிங் மால் பேரங்காடியில் 2024 பி.ஜே. ஸ்டாட்ஆப்
விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
இருப்பினும், வர்த்தக முத்திரைத் துறைகளை பிரபலப்படுத்துவதற்கு
பல்வேறு ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலம் அரசாங்கம் தற்போது
தனது கொள்கைகளை மாற்றி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.








