ஷா ஆலம், ஆக. 17- இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் உள்ள ஐஸ்கிரீம்
கடை ஒன்றில் கடந்த திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட கொள்ளை
முயற்சி தொடர்பில் அந்நிய பிரஜையை போலீசார் கைது செய்துள்ளனர்.
முப்பத்தொன்பது வயதுடைய அந்த ஆடவரை புஞ்சா ஆலமில் உள்ள
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று மாலை 4.15 மணியளவில்
தாங்கள் கைது செய்ததாக ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி
முகமது இக்பால் இப்ராஹிம் கூறினார்.
இக்கொள்ளை முயற்சியின் போது அந்நபர் பயன்படுத்திய ஆயுதம் மற்றும்
அணிந்திருந்த உடைகளைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாக அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.
கைதான நபரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற
ஆணை இன்று ஷா ஆலம் நீதிமன்றத்தில் பெறப்படும் எனக் கூறிய
அவர், சந்தேக நபரை கைது செய்ததன் மூலம் இந்த கொள்ளைச்
சம்பவத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனத் தாங்கள் நம்புவதாகக்
குறிப்பிட்டார்.
குற்றவாளி என நீரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் இருபதாண்டுச் சிறை
மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்க வகை செய்யும் தண்டனைச்
சட்டத்தின் 394வது பிரிவின் கீழ் இந்த கொள்ளைச் சம்பவம்
விசாரிக்கப்பட்டு வருகிறது என அவர் மேலும் சொன்னார்.
கடந்த திங்கள்கிழமை ஸ்ரீ மூடாவில் உள்ள ஐஸ்கிரீம் கடை ஒன்றில்
மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியின் போது அக்கடையை நடத்தி
வந்த பெண்மணி ஒருவர் காகிதம் வெட்டும் கத்தியால் வெட்டப்பட்டு
காயங்களுக்குள்ளானார்.








