செய்தி. R.ராஜா ஷா ஆலம், ஜூலை 25- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 92 இந்து ஆலயங்கள் மற்றும் சமய அமைப்புகளுக்கு மாநில அரசு சார்பில் 815,000 வெள்ளி மானியமாக வழங்கப் பட்டது. இவ்வாண்டிற்கான இரண்டாம் கட்ட நிதியளிப்பாக இது அமைந்துள்ளது.
இங்குள்ள மாநில அரசுத் தலைமைச் செயலகத்தின் ஜூப்ளி பேராக் மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் இந்த மானியத்திற்கான காசோலைகளை மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராய்டு சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாப்பா ராய்டு, மாநிலத்தில் உள்ள இந்து ஆலயங்களுக்கு இவ்வாண்டு 17 லட்சத்து 25 ஆயிரம் வெள்ளியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் மாதம் வரை 13 லட்சத்து 95 ஆயிரம் வெள்ளி ஆலயங்களுக்கு வழங்கப்பட்டதாகவும் எஞ்சிய 330,000 வெள்ளி இவ்வாண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மானியம் கோரி ஆலயங்கள் சார்பில் செய்யப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் சொன்னார். முன்பு ஆண்டொன்றுக்கு 200 முதல் 300 விண்ணங்கள் வரை மட்டுமே கிடைத்தன.
எனினும் இவ்வாண்டு பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்வு கண்டுள்ளது. மாநில அரசின் திட்டங்கள் மக்களைப் பரவலாகச் சென்றடைந்துள்ளதை இந்த எண்ணிக்கை உயர்வு காட்டுகிறது என்றார் அவர்.
வழிபாட்டுத்தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் சமய நிகழ்ச்சிகள் நடத்துவது ஆகிய நோக்கங்களுக்காக இந்த மானியம் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். மாநில அரசு வழங்கிய இந்த நிதியை ஆலய வளர்ச்சி மற்றும் சமய மேம்பாட்டிற்கு முறையாகப் பயன்படுத்தும்படி ஆலயப் பொறுப்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.








