MEDIA STATEMENT

எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகத் தேறிய 226 மாணவர்களுக்கு வெ.1 லட்சம் வெகுமதி- டத்தோ ரமணன் வழங்கினார்

22 ஜூலை 2024, 4:26 AM
எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பாகத் தேறிய 226  மாணவர்களுக்கு வெ.1 லட்சம் வெகுமதி- டத்தோ ரமணன் வழங்கினார்

சுங்கை பூலோ, ஜூலை 22- சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில்  கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வில் முழு தேர்ச்சி பெற்ற மொத்தம் 226 சிறந்த மாணவர்கள் ஒரு லட்சத்து 250 ரிங்கிட் ஊக்கத்தொகையைப் பெற்றனர்.

இந்த ஊக்கத்தொகையை பேங்க் ரக்யாட் அறவாறியத்துடன் இணைந்து  சுங்கை பூலோ நாடாளுமன்ற சேவை மையம் செயல்படுத்தியதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத்துறை துணை அமைச்சராகவும் இருக்கும் அவர், மாணவர்களை எதிர்காலத்தில் மேலும் வெற்றிபெற ஊக்குவிக்கும் வகையில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்றார்.

"குறிப்பாக சுங்கை பூலோ  நாடாளுமன்றத்தில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் பேங்க் ரக்யாட் அறவாரியம் வழங்கிய உறுதியான, அசைக்க முடியாத ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

"இந்த உன்னதமான முயற்சி நாடு முழுவதும் தொடர முடியும் என்றும், இதன் மூலம் நாட்டின் கல்வி தரத்தை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்த முடியும் என்றும் நான் நம்புகிறேன்.”

மேலும், இந்த திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்த முடியும் என்பதை உறுதி செய்வேன் என டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பண்டார் சுங்கை பூலோ இடைநிலைப்பள்ளி,  புக்கிட் காடிங் இடைநிலைப்பள்ளி, புக்கிட் ரஹ்மான் புத்ரா இடைநிலைப்பள்ளி, சௌஜானா உத்தாமா இடைநிலைப் பள்ளி, சுபாங் இடைநிலைப் பள்ளி, சுபாங் பிஸ்தாரி இடைநிலைப்பள்ளி, கோத்தா டாமன்சாரா செக்ஷன் 10 இடைநிலைப்பள்ளி  ஆகிய இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள் இன்று காலை இங்கு டேவான் மெராந்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊக்கத் தொகையைப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேங்க் ரக்யாட் தலைவர் டத்தோ பிலிப் பெனடிக்ட் லாசிம்பாங்கும் கலந்து கொண்டார்.

இதற்கிடையில், சிறந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்பு, அவர்கள் தொடர்ந்து கல்வியில் வெற்றி பெறுவதற்கு உந்து சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக லசிம்பாங் கூறினார்.

அதே சமயம், சிறந்த தேர்ச்சி அடைவதற்கான உத்வேகத்தைத் தொடர்ந்து பேணுவதற்கும், நாட்டின் மனித மூலதனத்தை அதிகரிப்பதற்கும் இந்த ஊக்குவிப்பு நிதி அவர்களின் உணர்வை வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

"பேங்க் ரக்யாட் அறவாரியம் வெறும் உதவி வழங்குவதோடு மட்டுமல்லாமல், மாணவர்கள் பெற்ற வெற்றிக்கு அங்கீகாரம் அளிக்கிறது என்பதற்கு இந்த முயற்சி சான்றாகும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.