செய்தி; சு.சுப்பையா
கோல குபு பாரு .மே 1 - கோல குபு பாரு இடைத்தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. நம்பிக்கை கூட்டணியின் இந்தியத் தலைவர்கள் களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தேசிய முன்னணி இந்தியத் தலைவர்களும் வாக்கு வேட்டையாட களத்தில் குதித்துள்ளனர்.
ம.இ.கா. தேர்தல் நடவடிக்கை அறை கடந்த 24 ஆம் தேதி அதன் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
வேட்பு மனு தாக்கல் நாளன்றும் ம.இ.கா.வின் முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இன்று ம.இ.கா.வின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன், உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா மற்றும் மேலும் பல முன்னணித் தலைவர்கள் ம.இ.கா.வின் தேர்தல் நடவடிக்கை அறைக்கு வருகை தந்தனர். ம.இ.கா.வின் இந்த இடைத் தேர்தலில் பிரச்சாரங்கள் மற்றும் எவ்வாறு வாக்குகள் சேகரிப்பது என்பது பற்றி திட்டமிட்டனர்.
கோல குபு பாருவில் 7,200க்கும் மேற்பட்ட இந்திய வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகளை நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவாக திரட்டுவதில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். வரும் 4ஆம் தேதி சனிக்கிழமை கோல குபு பாருவில் உள்ள இரட்டை முனீஸ்வரர் ஆலயத்தில் கெடா வெட்டி விருந்து வைக்க விருப்பதாக டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
தேசிய முன்னணியின் மற்றொரு இந்தியர் ஆதரவு கட்சியான ஐ.பி.எப்பும் தேர்தல் நடவடிக்கை அறை அமைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது என்று அக்கட்சியின் சிலாங்கூர் மாநில தலைவர் இங்கர்சால் தெரிவித்தார். ஐ.பி.எப் கட்சிக்கு கோல குபு பாரு சட்டமன்றத்தில் 9 கிளைகள் உள்ளன. இதில் மொத்தம் 700 க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர் அம்பாங் பெச்சா மலிவு வீடு , கம்போங் அசம் கும்பாங், ருமா மூரா ஆயிர் பன்னாஸ் போன்ற பகுதியில் கணிசமான இந்தியர்கள் உள்ளனர். இந்த வாக்குகளை திரட்டுவதில் தீவிர கவனம் செலுத்துவதாக இங்கர்சால் தெரிவித்தார்.
இந்த இடைத் தேர்தலில் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் 3 பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த இருக்கிறோம். இது குறித்து சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக் குழு உறுப்பினர் துவான் பாப்பா ராய்டு விடம் தெரிவித்து விட்டேன். மேலும் இந்த பிரச்சார கூட்டங்கள் நடத்த அவரிடம் நிதியுதவி கோரியுள்ளோம் என்று உலு சிலாங்கூர் ஐ.பி.எப். கட்சியின் தொகுதி தலைவர் மைடின் தெரிவித்தார்.
ஐ.பி.எப்.கட்சியின் சிலாங்கூர் மாநில தொகுதி தலைவர்கள் அன்றாடம் வருகை தந்து வாக்கு வேட்டையாடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர் என்று அத்தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் மைடின் தெரிவித்தார்.
ஆக மொத்தத்தில் இந்திய வாக்குகள் பெரிக்காத்தானுக்கு சென்று விடக் கூடாது என்பதில் அனைத்து இந்திய தலைவர்களும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








