குவாந்தான், ஏப் 11- கேமரன் ஹைலண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த வயதான காய்கறி வியாபாரி ஒருவர் தொலைபேசி மோசடியில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பான 958,088 வெள்ளியை இழந்தார்.
சம்பந்தப்பட்ட அந்த 69 வயதான முதியவர் கடந்த ஆண்டு மார்ச் 30 ஆம் தேதி வங்கி அதிகாரி எனக் கூறிக் கொண்ட சந்தேக நபரிடமிருந்து பேஸ்புக் மூலம் முதலில் அழைப்பைப் பெற்றதாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
மொத்தம் 26,700,000 அமெரிக்க டாலரை (சுமார் 12 கோடியே 60 லட்சம் வெள்ளி) டெபாசிட் செய்த பிறகு இறந்துபோன நபர் ஒருவரின் உறவினராக நடித்தால் அந்த சொத்தில் 50 சதவீத பங்கு கிடைக்கும் என்று போலி வங்கியாளர் பாதிக்கப்பட்டவரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பின்னர், இந்த பணப்பரிமாற்றம் தொடர்பில் வரி, லெவி கட்டணம், சட்டவிரோத பணப் பரிவர்த்தனைக்கு எதிரான கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவது உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் கையாளக்கூடிய 'வழக்கறிஞர்' எனக் கூறப்படும் நபருடன் ஆந்த போலி வங்கியாளர் தொலைபேசி அழைப்பை இணைத்தார்.
இந்த ஆசை வார்த்தையால் கவரப்பட்ட பாதிக்கப்பட்ட நபர், தனது சேமிப்பில் இருந்த பணத்தை 26 வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் 70 பரிவர்த்தனைகள் மூலம் கடந்தாண்டு மே 9 முதல் இந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதி வரை சேர்த்தார்.
ஆனால் வாக்குறுதியளித்தபடி அந்த பூர்வீகப் பணம் கிடைக்காததைத் தொடர்ந்து அந்த முதியவர் போலீசில் புகார் செய்தார் என்று யாஹாயா கூறினார்.
சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வரும்போது உடனடியாக போலீசார் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு சரி பார்க்குமாறு பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.








