ஜெருசலம்/டோஹா, பிப் 16 - காஸாவில் பெரிய அளவில் செயல்பட்டு
வரும் மருத்துமனையை தாங்கள் முற்றுகையிட்டதாக இஸ்ரேலிய
இராணுவம் நேற்று கூறியது. அந்த மருத்துவமனையின் இருண்ட
தாழ்வாரங்களில் குழப்பமும் கூச்சலும் துப்பாக்கி வேட்டுச் சத்தமும்
கேட்ட வேளையில் அங்கு புகைமூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.
நாஸ்சார் மருத்துவமனை மீதான அத்தாக்குதலை ‘துல்லியமானது மற்றும்
வரம்பிற்குட்பட்டது‘ என இஸ்ரேலிய இராணுவம் வர்ணித்தது. ஹமாஸ்
தீவிரவாதிகள் அங்கு மறைந்துள்ளதோடு பிணைக்கைதிகளையும் அங்கு
மறைத்து வைத்துள்ளதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்தாகவும் சில
கைதிகளின் உடல்கள் அங்கு இருப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அது
தெரிவித்தது.
எனினும், இஸ்ரேலிய இராணுவத்தின் இந்த கூற்றை உண்மைக்கு
மாறானது என்று ஹமாஸ் கூறியது.
அந்த மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள், நோயாளிகள் மற்றும்
அடைக்கலம் நாடியவர்களை வெளியேற்றியதாக ஹமாஸ்
நிர்வாகத்திற்குட்பட்ட அந்த பாலஸ்தீன பகுதியின் சுகாதார அதிகாரிகள்
கூறினர்.
இரண்டாயித்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் தென் பகுதி எல்லை
நகரான ராஃபாவுக்கு இரவு வேளையில் வந்து சேர்ந்த நிலையில் மேலும்
பலர் மத்திய காஸாவின் வட பகுதி நகரான டேய்ர் அல்-பாலாவுக்குச்
சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் படைகள்
இஸ்ரேலுக்குள் நுழைந்து 1,200 பேரைக் கொன்று 253 பேரை பிணை
பிடித்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் வான் மற்றும் தரை மார்க்கத் தாக்குதல்கள் மக்கள் நெரிசல்
மிகுந்த காஸா நகரை தரைமட்டமாக்கியுள்ளதோடு 28,663 உயிர்களையும்
பலி கொண்டுள்ளது.




