கோத்தா கெமுனிங், கிள்ளான் 15 ஜன - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சமீபத்தில் இந்தியர்களை இழிவுபடுத்தும் அறிக்கையை வெளியிட்டு இருப்பதை சிலாங்கூர் மாநில கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் கடுமையாகக் கண்டிப்பதாக கூறினார்.
இந்த அறிக்கை கீழ்த்தரமானது, நியாயமற்றது மட்டுமல்ல, பல இன மலேசிய சமூகத்திற்கு ஆழ்ந்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
மலேசியா அதன் கலாச்சார பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்ற நாடாகும். மேலும் ஒவ்வொரு இனமும் ஒரு சமூகமாக நமது முன்னேற்றத்திற்கு நல்லிணக்கத்திற்கு தனித்துவமான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்பை செய்திருக்கிறது. சமூகத்தின் பல்வேறு அடுக்குகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில், இனம் அல்லது மதத்தை பொருட்படுத்தாமல் ஒரு வலுவான நாட்டை அனைவரும் கட்டியெழுப்பி உள்ளோம்.
குறிப்பாக நாட்டில் ஒரு நல்ல முன்மாதிரியை கொண்டு ஒற்றுமையை வளர்க்க வேண்டிய ஒரு முன்னாள் பிரதமரின் அறிக்கை முரட்டுத்தனமானது. சகிப்புத்தன்மை உள்ள மலேசியர்களாகிய நாம் அனைவரும் கொண்டுள்ள கொள்கைகளை நம்பும் விழுமியங்களை அவமதிக்கும் செயலாகும்.
மலேசியாவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் மலேசியர்களே! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தையாக, எனது முன்னோர்களுக்கும் மலேசியாவில் உள்ள ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் நம் நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிடமும் விசுவாசமும் இல்லை. மலேசியாவில் இந்தியர்களின் முழு பங்களிப்பும் மலேசியாவுக்காக மட்டுமே! இந்திய சமூதாயத்தினரின் அர்பணிப்பை, மட்டும் அவமதித்ததாக இன்றி இந் நாட்டின் கலாச்சாரத்தை அவமதிக்க துன் மகாதீர் யார்?
பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் பாஸ் கட்சிகளை போன்று சமயத்துக்கும், இனத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசியல் பிரிவினை சக்திகளுடன் தீவிர உறவை கொண்டுள்ள ஒரு பிரமுகரான துன் மகாதீர் போன்று இல்லாமல் நாங்கள் " ஒட்டுமொத்த மலேசியாவின் ஒற்றுமையும், வளப்பத்தையும் மேம்பாட்டையும் நேசிக்கும் இனம் மலேசிய இந்தியர்கள் என்பதற்கு நீண்ட திடமான ஆதாரமுண்டு என்றார் அவர்.
மலேசியாவின் பலமாக மாறியுள்ள பன்முகத்தன்மையைப் பாராட்ட மறுக்கும் அவரின் மனப்பான்மையை அவரின் பேட்டி மக்களுக்கு படம் பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளது. நமது சமூக ஒற்றுமையை செயல்பாட்டையும் கெடுக்கும் அனைத்து வகையான இனவாத பேச்சுக்களையும் நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம்.
மலேசியா பல இனங்கள் மற்றும் கலாச்சாரங்களை கொண்டுள்ளது. மலேசியாவில் மலாய்க்காரர்கள், இந்தியர்கள், சீனர்கள், பிடாயு, ஈபான், கடாசான் மற்றும் பலர் உள்ளனர். இந்நாட்டின் முக்கிய ஒரு அரசியல் தலைவராக ஒற்றுமையை நோக்கி முன்னெடுக்க வேண்டியவரின் அறிக்கைகளும் அவரது முந்தைய அறிக்கையும் தாய் நாட்டை நேசிக்கும் மலேசியர்களை அவமதிக்கும் செயலாக மீண்டும் ஒலித்திருப்பது ஏமாற்றமளிப்பதாக உள்ளது.
இதுபோன்ற அறிக்கைகள் நாம் விரும்பும் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவர் ஓய்வு பெற்று, மலேசியாவை ஒன்றுபட்ட நாடாக வளர்க்க விரும்பும் புதிய தலைமுறைக்கு வழி விட வேண்டிய நேரம் இது.
ஒற்றுமை மற்றும் நீதியின் கொள்கைகளை கடைபிடிக்கும் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில், நமது ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு அறிக்கையையும் நிராகரித்து கண்டிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறோம்.
இனம் அல்லது மதம் பாராமல் அனைத்து மக்களுக்கும் அமைதியான மற்றும் இணக்கமான இடமாக மலேசியா தொடர்ந்து இருப்பதை உறுதி செய்வோம் என சிலாங்கூர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் ஒரு வக்கீலுமான எஸ்.பிரகாஷ் அறிக்கை விட்டுள்ளார்








