பெனாம்பாங், டிச 25- கைகலப்பின் போது கொல்லப்பட்டதாகக் கருதப்படும் 29 வயது வெளிநாட்டுப் பிரஜையின் மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜாலான் பெனாம்பாங்-கோத்தா கினாபாலுவில் கத்தியேந்திய ஆடவர்களுக்கிடையே நிகழ்ந்த சண்டை குறித்து நேற்று காலை பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்ததாக பெனாம்பாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் சமி நியூட்டன் தெரிவித்தார்.
ஆடவர் ஒருவர் உடலில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்ததாகவும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக குயின் எலிசபெத் மருத்துவமனையில் சுகாதார அதிகாரிகள் உறுதிப் படுத்தியதாகவும் சமி நியூட்டன் சொன்னார்.
இச்சம்பவம் தொடர்பில் தண்டனை சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்க படுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் குற்றம் நிகழ்ந்த இடத்தின் புகைப்படங்களை பரப்புவதையும் சம்பவம் தொடர்பான சரிபார்க்கப் படாத தகவல்களை சமூக ஊடக தளங்களில் பதிவேற்றுவதையும் தவிர்க்குமாறு போலீசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.








